சென்னை:
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது அரசியல் பிரவேசம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியதாவது:-
விஷால் எனது நெருங்கிய நண்பர். அவர் அரசியலில் இறங்கியிருப்பதற்கு எனது வாழ்த்துக்கள். அரசியல் வேறு நட்பு வேறு.
விஷால் மட்டுமல்ல. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மாற்றம் வரவேண்டும், மாற்றம் வர வேண்டும் என்று வெளியில் இருந்து பேசுபவர்கள் மாற்றத்தை கொண்டுவர அரசியலில் இறங்கி போராட வேண்டும்.
விஷால் தைரியமாக அரசியலில் இறங்கியதை பாராட்டுகிறேன். அவர் ஒரு சினிமா கலைஞர் மட்டுமல்ல. இந்த நாட்டின் குடிமகன் தானே. அரசியலுக்கு இவர் தான் வரனும். இவர் வரக் கூடாது என்று யாரையும், யாரும் சொல்ல உரிமை இல்லை.
என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா என்று புகழ்பெற்ற தலைவர்கள் எல்லாம் சினிமாவில் இருந்து வந்திருக்கிறார்கள். எந்த துறையில் இருந்தும் அரசியல் சேவைக்கு வரலாம்.
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? விஷாலுக்கு வாய்ப்பு உண்டா? என்பதைப் பற்றி இப்போது யோசிக்க வேண்டியதில்லை. அதை மக்கள் முடிவு செய்வார்கள்.
அரசியலில் இறங்குவது வேறு. செல்வாக்கு பெறுவது வேறு. அரசியலில் இறங்கி செய்யும் செயல்களை பொறுத்து மக்கள் வாக்களித்து செல்வாக்கை கொடுப்பார்கள்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.