செய்திகள்

அ.தி.மு.க 2 அணிகளும் ஒன்று சேர வேண்டும்: நடிகர் கருணாஸ் பேட்டி

அ.தி.மு.க 2 அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்று நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. இன்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது கூறியதாவது:-

என்னை சட்டமன்ற உறுப்பினராக்கி நான் பேசுவதையும், பாடுவதையும் ரசித்து மகிழ்ந்தவர் ஜெயலலிதா அவரது மறைவு உண்மையிலேயே என்னை மிகவும்ஆழமாகப்பாதித்தது. என்னை மட்டுமல்ல லட்சோப லட்சம் உண்மைத் தொண்டர்களை பாதித்து விட்டது.

உண்மைத் தொண்டர் களின் விருப்பத்திற்கு இணங்க, இரு அணிகளாக இருக்கும் தலைவர்கள் ஒன்று சேர்ந்து “ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பொன் மொழிக்கு இலக்கணமாக திகழ வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

எனக்குப்பின்னாலும்100 ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்கும். அ.தி.மு.க. வை யாராலும் அழிக்க முடியாது என்று ஜெயலலிதா கூறினார். தற்காலிக பிரிவால் புழுங்கிக் கொண்டிருக்கும் தலைவர்கள் அனைவரின் மீதும் அவர் வைத்த நம்பிக்கையால் தான் அப்படி சொன்னார். அந்த வாக்கு நிறைவேறவேண்டும்.

ஜெயலலிதா வாக்குக்கு மதிப்பளிக்கும் வகையில் ஓ. பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்று சேர வேண்டும். தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆட்சியை வழங்க வேண்டும். அவர் வளர்த்த கட்சி இரண்டாக கூடாது.

ஜெயலலிதா தமிழக மக்களுக்காக பல நலத் திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தி மக்கள் மனங்களில் நிறைந் திருக்கிறார். தொடர்ந்து அவரது ஆட்சியை அனைவரும் இணைந்து நடத்திக் காண்பித்தால் தான் ஜெயலலிதா ஆன்மா சாந்தி யடையும்.

இரு அணிகளையும் இணைக்கும் அந்த புனிதமான பணியில் அ.தி.மு.க. கூட்டணி இயக்கமாகிய முக்குலத்தோர் புலிப்படை தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றும்.

இவ்வாறு கருணாஸ் கூறினார்.