சென்னை:
நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ம் தேதி ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டுக்கு சென்று அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து விட்டு அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அன்று மாலை மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் திரள்கிறார்கள். கொடி தோரணங்கள், சுவரொட்டிகள் என்று நகரையே விழாக்கோலமாக அமர்க்களப்படுத்துகின்றனர். அந்த கூட்டத்தில் கமல்ஹாசன் கட்சி பெயரை அறிவித்து கொள்கை மற்றும் திட்டங்களை வெளியிடுகிறார்.
கட்சியின் தலைவராக கமல்ஹாசன் நியமிக்கப்படுகிறார். பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். ராமநாதபுரம், மதுரை, சிவகங்கையில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
ஏற்கனவே கட்சி பெயர் தேர்வு செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. கட்சி பெயரை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கு தேவையான பிரமாண பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி தயார் செய்துள்ளனர். கட்சி பெயரை பதிவு செய்யும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கறிஞர் சங்கம் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். அரசியல் பயணம், பயண திட்டங்கள் மற்றும் கட்சி பெயர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #KamalHaasanPoliticalEntry #KamalHaasan #tamilnews