செய்திகள்

தமிழக அரசு சரியாக செயல்படவில்லை- கமல்ஹாசன் குற்றச்சாட்டு

இப்போது உள்ள தமிழக அரசு சரியில்லை. சரியாக செயல்படவும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். #kamalhaasan #tngovt #makkalneethimaiyam

ஈரோடு:

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல் ஹாசன் இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டத் தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.

முதல் நிகழ்ச்சியாக ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சிக்கு இன்று காலை 9 மணிக்கு வந்தார். அவரை பார்க்க காலை 7 மணிக்கே பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர்.

மொடக்குறிச்சி நால் ரோட்டில் கட்சி கொடியை கமல்ஹாசன் ஏற்றினார். அப்போது கூடி இருந்த தொண்டர்கள் கமல் வாழ்க, வருங்கால முதல்வர் வாழ்க என்று கோ‌ஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.

அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கே கூடி இருக்கும் கூட்டத்தை காணும்போது தமிழகத்தில் பெரிய எழுச்சி மாற்றம் ஏற்படுவது எனக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இப்போது உள்ள தமிழக அரசு சரியில்லை. சரியாக செயல்படவும் இல்லை. இதனால்தான் நாம் இங்கே கூடி இருக்கிறோம். இதற்காகத்தான் நானும் அரசியலுக்கு வந்துள்ளேன்.

சரியில்லாத அரசை நாம் இணைந்து சரி செய்வோம். மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் இல்லை என்றார்கள். பஸ் நிலையத்தை நாம் கொண்டு வருவோம்.

இங்கு 100 ஆண்டு பழமை வாய்ந்த தொடக்கப்பள்ளி உள்ளது. அதனை வேறு இடத்துக்கு மாற்றி அங்கே பஸ் நிலையம் கட்டப்போவதாக சொல்கிறார்கள்.

அதை நீங்கள் (மக்கள்) எதிர்க்கிறீர்கள். பள்ளிக்கூடத்தை இடிக்கக்கூடாது என்றும் கூறுகிறீர்கள். அந்த பழமையான பள்ளிக் கூடத்தை இடிக்க விடாமல் உங்களுடன் சேர்ந்து நானும் போராட தயாராக உள்ளேன்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். #tamilnews #kamalhaasan #tngovt #makkalneethimaiyam

SCROLL FOR NEXT