செய்திகள்

நான் கட்சித் தொடங்கி, அரசியலுக்கு வருவது உறுதி: நடிகர் கமல் அறிவிப்பு

நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை கேளம்பாக்கத்தில் கமலஹாசன் பிறந்தநாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டார். அப்போது  ரசிகர்கள் மத்தியில் கமலஹாசன் பேசியதாவது:

பேரழிவு வரும் வரை பொறுத்திருக்க வேண்டுமா? வரும் முன் காக்க அனைவரும் முன் வர வேண்டும். இயற்கை சீற்றத்திற்கு ஏழை, பணக்காரர்கள் என வித்தியாசம் தெரியாது. ஏதோ ஆர்வக்கோளாறில் பதவிக்காக பிரச்சனைகளை பற்றி நான் பேசவில்லை. பணக்காரர்கள் மட்டும் முறையாக வரிகட்டினால் போதும் நாடு ஓரளவுக்கு சரியாகி விடும்.  அடக்குமுறை என்பது அரசியலில் யதார்த்தமாகி விட்டது.

தமிழ்நாட்டுக்காக கையேந்துவதில் வெட்கம் இல்லை. தமிழக நலன்களுக்காக ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். சரித்திரத்தை திரும்பி பார்க்காமல் செய்த தவறையே திரும்ப திரும்ப செய்து வருகிறோம்.

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி.  கட்சி தொடங்குவதற்கான பணத்தை ரசிகர்கள் தருவார்கள். அதனால் பயம் இல்லை.  ரசிகர்களிடம் வாங்கும் பணத்துக்கு கணக்கு வைக்க செயலி பயன்படுத்தப்படும்.  கட்சி தொடங்குவதற்கான முதல் பணி தான் செல்போன் செயலி.

ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் 7-ம் தேதி செயலி அறிமுகம் செய்யப்படும். அரசியல் கட்சி தொடங்க பணம் குறித்த பயம் எனக்கு இல்லை. இது ஆரம்ப கூட்டம்தான், இதுபோன்று இன்னும் 50 கூட்டங்களை நடத்த வேண்டும். அரசியல் கட்சி அறிமுகத்தை அமைதியாகத்தான் செய்ய முடியும்.