திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதி முதல் சில தொழில்களை மட்டும் நிபந்தனைகளுடன் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் இன்று பல்வேறு பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை தளர்த்த முடிவு செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்தில் உள்ள காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய, நான்கு மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் பெரும்பாலான சேவைகள் தொடங்க உள்ளன. குறிப்பாக உணவகங்கள், பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. உணவகங்கள், பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கியதை சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சகம் கேரள அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், கேரளாவின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கை மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை நீர்த்து போகச் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.