தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 19 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களில் எப்போதும் கூட்டநெரிசல் காணப்படுகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொள்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில் பஸ்களின் கதவை அடைக்க முடிவதில்லை. அவ்வாறு மூடும்பட்சத்தில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படும். அதேநேரம் விபத்தும் ஏற்படுகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போக்குவரத்து கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் அவ்வப்போது பஸ்களில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:-
தொடர் விபத்துக்கள் காரணமாக போக்குவரத்து கழக நிர்வாகம் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கிறது. கூட்ட நெரிசலின் போது எங்களால் பஸ்களின் கதவுகளை அடைக்க முடிவதில்லை. ஆனாலும் படியில் நிற்க வேண்டாம் என்று தொடர்ந்து எச்சரித்து வருவதோடு அவர்களை உள்ளே அழைத்து கதவை மூட முயற்சி செய்து வருகிறோம்.
கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை போக்குவரத்து கழக நிர்வாகம் இயக்க வேண்டும்.
அதன்காரணமாக விபத்துக்கள் குறையும். பெரும்பாலான பஸ்களில் கதவுகள் பழுதடைந்து இருக்கின்றன. அதை மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.