செய்திகள்

அமெரிக்காவில் செக்ஸ் புகாரில் அட்டார்னி ஜெனரல் ராஜினாமா

அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாண அட்டார்னி ஜெனரலாக (அரசு தலைமை வக்கீலாக) பணியாற்றிய எரிக் சினைடர்மேன் செக்ஸ் புகாரின் பேரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். #EricSchneiderman #AttorneyGeneral

மாலை மலர்

நியூயார்க்:

அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாண அட்டார்னி ஜெனரலாக (அரசு தலைமை வக்கீலாக) பணியாற்றி வந்தவர், எரிக் சினைடர்மேன்.

இவர் மீது 4 பெண்கள் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். இது தொடர்பாக ‘தி நியூயார்க்கர்’ பத்திரிகையில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் 2 பெண்கள், அவர் குடிபோதையில் தங்கள் மீது பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்தியதாக கூறி உள்ளனர்.

இதையடுத்து அவர் பதவி விலகுமாறு மாகாண கவர்னர் ஆணட்ரூ கியூமோ உத்தரவிட்டனர். அதன்பேரில் எரிக் சினைடர்மேன் அட்டார்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார்.

அதே நேரத்தில் அவர் தன்மீது எழுந்து உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து உள்ளார். அதில் அவர், “கடந்த சில மணி நேரத்தில் என் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. எனக்கு எதிராக கூறப்பட்டு உள்ள அந்த குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். இந்த குற்றச்சாட்டுகள் என் பணி நடத்தையுடன் தொடர்பு இல்லாதது, இருப்பினும் என்னை பணி செய்வதில் இருந்து இந்த நெருக்கடியான நேரத்தில் தடுக்கின்றனர். எனவே நான் பதவி விலகுகிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “நான் யார் மீதும் பாலியல் ரீதியில் தாக்குதல் தொடுத்தது கிடையாது. சம்மதம் இல்லாமல் யாருடனும் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதும் இல்லை” என்றும் கூறி உள்ளார்.  #EricSchneiderman #AttorneyGeneral #tamilnews