செய்திகள்

லஞ்சம் பெற்றதாக கைதான தலைமை கணக்காயர் அருண் கோயலின் ஜாமீன் மனு தள்ளுபடி

லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கைதான தமிழக அரசின் தலைமை கணக்காயர் அருண் கோயலின் ஜாமீன் மனுவை சென்னை சி.பி.ஐ கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை:

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் கணக்காளர் பணி நியமனத்திற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக பொது கணக்காயர் அருண் கோயலை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

இவருக்கு உடந்தையாக இருந்த மூத்த கணக்கு அதிகாரி கஜேந்திரன், பொதுப்பணித் துறையின் விழுப்புரம் டிவிஷனில் கணக்காளராக பணி நியமனம் பெற விரும்பி லஞ்சம் கொடுத்த சிவலிங்கம், அதற்கு உதவியாக இருந்த திருவள்ளூர் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் எல்.எஸ்.ராஜா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து, அவர்கள் அனைவரும் சி.பி.ஐ காவலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அருண் கோயல் உள்ளிட்ட நால்வரும் ஜாமீன் கோரி சென்னை சி.பி.ஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இன்று காவல் முடிந்து அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அருண் கோயல் உள்ளிட்டோரின் காவலை 20-ம் தேதி வரை நீட்டித்த நீதிபதி, அவர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #TamilNews