விபத்து 
செய்திகள்

விருதுநகர் அருகே விபத்து: பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் படுகாயம்

விருதுநகர் அருகே கார் மீது ஜீப் மோதிய விபத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மாலை மலர்

விருதுநகர்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 28). இவர் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு தனது நண்பர்களுடன் காரில் வந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (28), திருப்பதி (26), அய்யனார் (28), நாகநாதன் (28) ஆகியோர் பயணம் செய்தனர்.

சிவகாசியில் பட்டாசு வாங்கிவிட்டு அவர்கள் காரில் ஊருக்கு புறப்பட்டனர். திருச்சுழி அருகே உள்ள கத்தாளம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த போலீஸ் ஜீப் மீது மோதியது.

மோதிய வேகத்தில் கார் ரோட்ரோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது காரில் இருந்த பட்டாசுகள் வெடித்தது. உடனே காரில் இருந்த அனை வரையும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக மீட்டனர்.

வெடி வெடித்ததில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசமானது. விபத்தில் முத்துராமலிங்கம், நாகநாதன், திருப்பதி, அய்யனார் மற்றும் போலீஸ் ஜீப்பில் பயணித்த எம்.ரெட்டியபட்டி இன்ஸ் பெக்டர் கீதா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.