செய்திகள்

சேலம் அருகே அடுத்தடுத்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி

சேலம் அருகே அடுத்தடுத்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொண்டலாம்பட்டி:

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்த நெய்காரப்பட்டி அருகே உள்ள மலங்காடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன்(வயது 55). தறி தொழிலாளி. இன்று காலை சேலம்-சங்ககிரி சாலை மெயின்ரோட்டில் உள்ள மூங்கில் முனியப்பன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் பழனியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மகன் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீஸ் எஸ்.ஐ. ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தார். பழனியப்பனுக்கு பழனியம்மாள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

சேலம் காகாபாளையம் அருகே உள்ள கனககிரி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன்(63). கூலி தொழிலாளி. நேற்று மாலை சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பள்ளி அருகே சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மகன் தங்கராஜ்(35) கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.