செய்திகள்

ஆம்பூர்-ராணிப்பேட்டை விபத்தில் மாணவர் - ரெயில்வே ஊழியர் பலி

ஆம்பூர்-ராணிப்பேட்டை விபத்தில் மாணவர் - ரெயில்வே ஊழியர் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஆம்பூர்-ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர்:

ஆம்பூர் 9-வது தெரு நியூ பெத்தலகேம் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் சார்லஸ் (வயது 16). பிளஸ்1 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இகோ மகன் ஜான்‌ஷன் (17) பிளஸ்1 மாணவர். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

இவர்கள், நேற்று மாலை பைக்கில் ஏலகிரி மலைக்கு சென்று விட்டு, சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

பைக் ஆம்பூர்- செங்கிலி குப்பம் 6 வழி சாலையில் வந்துக் கொண்டிருந்த போது, சென்னையில் இருந்து மைசூர் நோக்கி சென்ற மினி வேன் அங்குள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிக் கொண்டு சர்வீஸ் சாலையில் இருந்து 6 வழி சாலைக்குள் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்வேன் பைக் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சார்லஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜான்‌ஷன் காயமடைந்தார். ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

பீகார் மாநிலம் ருத்தாஸ் மாவட்டம் சதக்பூர் பகுதியை சேர்ந்தவர் ராம்பர் வேஸ் மகன் விவேக்குமார் சவ்பே (வயது 26). ரெயில்வே ஊழியர். இவர் தற்போது வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே உள்ள கொளத்தேரி ரெயில்வே கேட் கீப்பராக உள்ளார்.

இவர், ராணிப்பேட்டை அம்மூரில் தங்கியுள்ளார். இவருடன், ராஜஸ்தானை சேர்ந்த மற்றொரு ரெயில்வே ஊழியரான ராஜேஷ் (25) என்பவரும் தங்கி பணி புரிந்து வந்தார். இருவரும் இன்று காலை மேல்வேளம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சோளிங்கரில் இருந்து வந்த லோடு ஆட்டோ பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ரெயில்வே ஊழியர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்ததில், ராஜேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விவேக்குமார் சவ்பே உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லையோரம் உள்ள வீரண மலை கிராமத்தை சேர்ந்தவர் நாயக்க ரெட்டி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 26). கல்லூரி மாணவர். ராஜேந்திரன். வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது, சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற காக்கி நாடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி பயணம் செய்தார். அவர் படிக்கட்டில் நின்றபடி பயணித்ததாக தெரிகிறது. வாணியம்பாடி அருகே உள்ள புதூர் என்ற பகுதியில் ரெயில் சென்றது.

அப்போது படிக்கட்டில் நின்றிருந்த ராஜேந்திரன் தவறி விழுந்தார். இதில் ரெயிலில் சிக்கியதில் உடல் சிதறி அவர் உயிரிழந்தார். ஜோலார் பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.