செய்திகள்

திருக்கோவிலூரில் விபத்து: பா.ம.க. பிரமுகர் பலி

திருக்கோவிலூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பா.ம.க. பிரமுகர் பலி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள வீரட்டகரம் கிராமத்தைச் சேரந்தவர் ராஜி (வயது 37). பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவரும் ஆவிகொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பர் காத்தவராயனும் (வயது 47) திருக்கோவிலூர் வந்தனர்.

பின்னர் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தனர். திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த போது திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென்று ராஜி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ராஜி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பலத்த ரத்த காயங்களுடன் காத்தவராயன் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது.

இதேபோல் திருக்கோவிலூர் அருகே மற்றொரு விபத்து நடந்தது. வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் செட்டித்தாங்கல் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் மேளம் அடித்துவிட்டு தனது சொந்த ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். திருக்கோவிலூர்- உளுந்தூர்பேட்டை சாலையில் கரும்பு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த லாரி திடீரென்று பிரபாகரன் மீது மோதியது.

இதில் அதே இடத்தில் பிரபாகரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். இந்த 2 விபத்துகள் குறித்தும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், இன்ஸ் பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் 2 விசாரனை நடத்தி வருகின்றனர்.