நெல்லை:
ராதாபுரம் அருகே உள்ள சவுந்தர பாண்டியபுரத்தை அடுத்த மேல கள்ளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் என்ற கணேசன் (வயது 24). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இவரது நண்பர் ரமணன் (26), கூலி தொழிலாளி. நேற்று நள்ளிரவு இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ராதாபுரம் வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்றனர்.
மேல கள்ளிகுளம் அருகே உள்ள சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் சறுக்கி கீழே விழுந்தனர். இதில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை மீட்க நள்ளிரவு நேரம் என்பதால் யாரும் வரவில்லை.
இதில் நீண்ட நேரம் உயிருக்கு போராடிய கணேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். ரமணன் அரை மயக்கத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் அந்த பகுதிக்கு வந்தவர்கள், உயிருக்கு போராடிய ரமணனை மீட்டு வள்ளியூர் தனியார் ஆஸ்பத் திரிக்கு அனுப்பினர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலியான கணேஷ் உடலை ராதாபுரம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இது குறித்து ராதாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினுகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.