கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள வட்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன். இவரது மனைவி மலர்கொடி. இவர்களது மகன்கள் அரவிந்த்குமார் (வயது23), அன்புக்குமார்(25). இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். ஸ்ரீநகரில் பணியில் இருந்த அரவிந்த்குமார், கடந்த 27-ந் தேதி ஒரு மாதம் விடுமுறையில் வீட்டிற்கு வந்தார்.
கடந்த 3-ந் தேதி கிருஷ்ணகிரி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்ற அரவிந்த்குமார், எதிரே வந்த மோட்டார்சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைகாக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 6-ந் தேதி மூளைச்சாவு ஏற்பட்ட அரவிந்த்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். இதுகுறித்து அரவிந்த்குமாரின் அண்ணனும், ராணுவ வீரருமான அன்புக்குமார் கூறியதாவது:-
2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த எனது தம்பி அரவிந்த்குமார், நாட்டு மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். விபத்தில் 95 சதவீதம் மூளை சாவு ஏற்பட்டதால், உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும் என்கிற எண்ணத்தில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து முன்வந்தோம். ராணுவ மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் நீண்ட சோதனைக்கு பிறகு, அரவிந்த்குமாரின் இதயம், சிறுநீரகம், கண்கள், கல்லீரல், தோல் உள்பட 9 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.