செய்திகள்

ஏ.சி. உணவகங்களில் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படவில்லை: அரசாணை வெளியிடாததால் குழப்பம்

18-ல் இருந்து 12 சதவீதமாக ஏ.சி. உணவகங்களில் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதாக அரசாணை வெளியிடாததால் மக்கள் மற்றும் உணவக உரிமையாளர் குழப்பம் அடைந்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரம ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

டெல்லியில் சமீபத்தில் கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 27 பொருட்களுக்கான வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை இதற்கு அரசாணை வெளியிடப்படவில்லை.

ஏ.சி. உணவகங்களுக்கு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வரி குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதால் பொது மக்களுக்கும் உணவக உரிமையாளர்களுக்கும் இடையே தொடர்ந்து வாக்கு வாதம் சச்சரவுகள் ஏற்படுகின்றன. எனவே அரசாணை வெளியானால் தான் வரியை குறைக்க முடியும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். எனவே மக்கள் குழப்பம் அடைய வேண்டாம்.

மேலும் 27 வகை இதர பொருட்களுக்கும் வரி குறைப்பு சம்பந்தமாக அரசாணை வெளியானால் வரியை குறைக்க இருப்பதாக வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.