செய்திகள்

அத்துமீறி விமர்சனங்கள் - சமூக வலைத்தளங்களுக்கு கடிவாளம்?: சுப்ரீம் கோர்ட்டு பரிசீலனை

அத்துமீறி விமர்சனங்களை நீக்க சமூக வலைத்தளங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடுகள் என்ற பெயரில் கடிவாளத்தை கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு பிரச்சினைக்கும், அது நீதிபதிகள், நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி இருந்தால்கூட அசாதாரணமான கருத்துகள், கேலி-கிண்டல்கள், ஆக்ரோஷமான பதிலடிகள் வெளியாகின்றன. சமூக வலைத்தளங்களுக்கு தணிக்கை இல்லாததால், யாரும் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற நிலை உள்ளது.

இது சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அமர்வில், நேற்று ஒரு விவகாரம் ஆனது.

மூத்த வக்கீல் ஒருவர், பெரும்பாலான நீதிபதிகள் அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் கூறி இருந்தது விவாதத்துக்கு ஆளானது.

அப்போது நீதிபதிகள், இப்படி சொல்கிறவர்கள் கோர்ட்டுக்கு வந்து, அரசாங்கம் எப்படி கண்டனத்துக்கு ஆளாகிறது என்பதை பார்க்கட்டும் என்றனர்.

சமூக வலைத்தளங்கள் பற்றிய நீதிபதிகளின் கண்ணோட்டத்துக்கு மூத்த வக்கீல்கள் ஹரிஷ் சால்வே, பாலி நாரிமன் ஆதரவு அளித்தனர். ஒரு கட்டத்தில் ஹரிஷ் சால்வே, “சமூக வலைத்தளங்களுக்கு சில ஒழுங்குமுறைகளை கொண்டுவர வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். நீதிபதிகள் அதை ஏற்றுக்கொண்டனர். எனவே சமூக வலைத்தளங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடுகள் என்ற பெயரில் கடிவாளத்தை கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.