செய்திகள்

மும்பை பெண்ணை திருமணம் செய்ய அனுமதி கோரி அபு சலீம் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்

1993 மும்பை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான அபு சலீம் திருமணம் செய்துகொள்ள பதிவாளார் அலுவலகம் செல்ல அனுமதி வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மாலை மலர்

மும்பை:

1993-ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 257 பேர் உயிரிழந்தனர், மேலும் 713 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிழல் உலக தாதா அபு சலீம் போர்ச்சுக்கல் நாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து 2005ம் ஆண்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, அவர் மீதான குண்டுவெடிப்பு வழக்கு மும்பை தடா கோர்ட்டில் நடைபெற்றது. இதற்கிடையே மற்றொரு வழக்கில் கடந்த டிசம்பர் 2015ல் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அபு சலீம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதற்காக ஜெயிலில் இருந்து வெளியில் சென்றுவர அனுமதி அளிக்குமாறும் வேண்டியிருந்தார். அதை தொடர்ந்து அபு சலீமை திருமணம் செய்ய இருக்கும் பெண்ணும் அவரை திருமணம் செய்துகொள்ள அனுமதி வேண்டி நீதிமன்ரத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவிற்கு பதிலளித்த நீதிபதிகள் திருமணம் செய்துகொள்வது அவரவர் உரிமை அதற்காக அனுமதி பெற தேவையில்லை என மனுவை தள்ளுபடி செய்தது. அபு சலீம் மனு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அபு சலீம் நேற்று மறுபடியும் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் திருமணம் செய்து கொள்வதற்காக பதிவாளர் அலுவலகம் செல்ல அனுமதி அளிக்குமாறு வேண்டியுள்ளார். 

அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், இதற்கு முன்னதாக இதுபோன்ற வழக்குகளில் அனுமதி அளிக்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் வெளியே சென்று வேறு எந்த தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன் எனவும் அபு சலீம் தனது மனுவில் உறுதி அளித்துள்ளார்.