முககவசங்கள் வழங்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்த போது எடுத்த படம். 
செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முககவசங்கள் வழங்கும் திட்டம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முககவசங்கள் வழங்கும் திட்டத்தை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முககவசங்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ். பிரபாகர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொது வினியோக திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,094 ரேசன் கடைகளில், 5 லட்சத்து 4 ஆயிரத்து 13 குடும்ப அட்டைகளில், 17 லட்சத்து 14 ஆயிரத்து 723 குடும்ப உறுப்பினர்களுக்கு விலையில்லா முககவசங்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும் முதல் கட்டமாக 7 லட்சத்து 74 ஆயிரம் முககவசங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 2 லட்சத்து 10 ஆயிரம் முககவசங்கள் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மீதமுள்ள முககவசங்கள் வரப்பெற்ற உடன் மாவட்ட முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுராம், கூட்டுறவு இணை பதிவாளர் சந்தானம், மாவட்ட வழங்கல் அலுவலர் கனகராஜ், வட்ட வழங்கல் அலுவலர் தேன்மொழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மிருளாளினி, ஜெய்சங்கர், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் சத்யா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.