ராயபுரம்:
ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிட விரும்புபவர்களிடம் நேற்று முதல் வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன.
தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி வேட்பு மனுக்களை பெற்று வருகிறார். முதல் நாளான நேற்று சுயேட்சை போட்டியாளர்கள் 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். 2-வது நாளான இன்று மதியம் வரை யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
நேற்று காலை முதல் வேட்புமனு விண்ணப்ப படிவங்களும் வினியோகம் செய்யப்படுகின்றன. நேற்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் விண்ணப்ப படிவத்தை வாங்கிச் சென்றனர். நேற்று மட்டும் 70 பேர் விண்ணப்ப படிவம் வாங்கி இருந்தனர். இன்று மேலும் 20 பேர் விண்ணப்ப படிவங்களை வாங்கிச் சென்றனர். தீபா பேரவையினரும் இன்று விண்ணப்ப படிவங்களை வாங்கினார்கள். 2 நாட்களில் இதுவரை 90 பேர் விண்ணப்ப படிவங்களை வாங்கியுள்ளனர்.