கோப்பு படம். 
செய்திகள்

நாமக்கல்லில் பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

நாமக்கல்லில் ஸ்கூட்டரில் வந்த பெண்ணிடம் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாமக்கல்:

நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வசித்து வருபவர் தங்கவேல். இவரது மனைவி செல்வி (வயது 40). இவர் வள்ளிபுரத்தில் உள்ள லாரி அலுவலகம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பணியை முடித்து விட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் செல்வியை வழிமறித்து, அவர் அணிந்து இருந்த 9 பவுன் நகையை பறித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி திருடன், திருடன் என சத்தம் போட்டார். ஆனால் பொதுமக்கள் திரண்டு வருவதற்குள் மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். 

இதுகுறித்து செல்வி நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். செல்வியிடம் பறிக்கப்பட்ட நகையின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT