செய்திகள்

9 மாத கர்ப்பிணியை துன்புறுத்தியதாக கைதான போலீஸ்காரர் கோவை சிறையில் அடைப்பு

பொள்ளாச்சியில் 9 மாத கர்ப்பிணியை துன்புறுத்தியதாக கைதான போலீஸ்காரர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மாலை மலர்

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மகேஷ்ராஜ். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் போலீஸ்காரராக உள்ளார். தற்போது மகேஷ்ராஜ் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கோவை குனியமுத்தூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவர் கோட்டூர் பெரியார் நகரை சேர்ந்த சவுந்தர்யா என்ற பெண்ணை கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்தார். சவுந்தர்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தான் போலீஸ்காரர் மகேஷ்ராஜ் அவரை திருமணம் செய்தார். சவுந்தர்யா தற்போது 9- மாத கர்ப்பிணியாக உள்ளார்.

சவுந்தர்யா பொள்ளாச்சி கிழக்கு போலீசில் கணவர் மகேஷ்ராஜ், மாமியார் தமிழரசி, மகேஷ்ராஜ் அண்ணன் ஆகியோர் மீது புகார் செய்தார். போலீசார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

நேற்று போலீஸ்காரர் மகேஷ்ராஜ், அவரது அண்ணன் நாராயணராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள தமிழரசியை தேடி வருகிறார்கள்.