செய்திகள்

நூதன முறையில் ஸ்டேட் வங்கியை ஏமாற்றி ரூ.9 கோடி மோசடி

மும்பையை சேர்ந்த ஒரு நபர் நூதன முறையில் ஸ்டேட் வங்கியை ஏமாற்றி ரூ.9 கோடி மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.

மாலை மலர்

மும்பை:

வங்கிகளில் மோசடி நடக்காமல் இருக்க பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அதையும் மீறி வைர வியா பாரி நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த நிலையில் மும்பையை சேர்ந்த ஒரு நபர் நூதன முறையில் ஸ்டேட் வங்கியை ஏமாற்றி ரூ.9 கோடி மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்டவர் சந்தீப்குமார் ரகு பூஜாரி. இவர், நியூ மும்பையில் உள்ள சீவுட் கிளையில் 3 பிரீபெய்டு பண அட்டை வாங்கி இருந்தார். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது, அந்த நாடுகளில் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த அட்டையில் வசதிகள் உள்ளன.

இந்த அட்டையுடன் இங்கிலாந்துக்கு சென்ற அவர் இந்த அட்டையில் தகவல் விவரங்களை நூதன முறையில் மாற்றம் செய்து அவற்றை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களில் பொருட்களை வாங்கி உள்ளார்.

2016 நவம்பரில் இருந்து 2017 பிப்ரவரி வரை 374 தடவை அவர் கார்டுகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி இருந்தார்.

இதன்படி ரூ. 9 கோடியே 10 லட்சம் பொருட்கள் வாங்கப்பட்டு இருந்தது. அவர் வாங்கி இருந்த கார்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மட்டும்தான் வாங்க முடியும்.

ஆனால், கார்டு தகவல்களில் மாற்றம் செய்து இருந்ததால் அதன் மூலம் ஏமாற்றி இவ்வளவு பணத்தை மோசடி செய்து இருக்கிறார்.

இந்த கணக்கு வழக்குகளை தனியார் சாப்ட்வேர் நிறுவனம் கண்காணிக்கும். அந்த நிறுவனம் இந்த மோசடியை கண்டுபிடித்து ஸ்டேட் வங்கிக்கு தகவல் தெரிவித்தது.

இதையடுத்து ஸ்டேட் வங்கி சார்பில் சி.பி.ஐ.யில் புகார் செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தீப்குமார் ரகு பூஜாரி தலைமறைவாகி விட்டார்.

பிரீபெய்டு கார்டு தகவல் தொழில்நுட்பத்தில் மாற்றங்களை செய்து கொடுப்பதற்கு சிலர் உதவி இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்கள் யார்? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.