பீகாரில் இடி-மின்னல் தாக்கி 83 பேர் பலி 
செய்திகள்

பீகாரில் சோகம்: இடி-மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழப்பு

பீகாரில் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுக்கு 83 பேர் பலியாகிய சோக சம்பவம் நடந்துள்ளது.

பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதன் காரணமாக குடிநீர் சப்ளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகாரில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

உயிரிழந்த 83 பேரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். நவாடாவில் 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூரில் தலா 6 பேரும் தர்பங்கா மற்றும் பாங்காவில் தலா 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) பீகார் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. மேலும் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.