குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே 
செய்திகள்

மத்திய அரசு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு 700 வீடுகள்- கலெக்டர் தகவல்

குமரி மாவட்டத்தில் 2020-2021-ம் ஆண்டுக்கு 700 வீடுகள் கட்டி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

மாலை மலர்

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முழு நேர மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மற்றும் கடல் மீனவர் அல்லது மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்கள் சார்ந்த மீனவர்களுக்கு மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் இந்திரா குடியிருப்பு திட்ட வழிமுறைகளின் அடிப்படையில் 5 ஆயிரம் வீடுகளை மொத்தம் ரூ.85 கோடியில் கட்ட தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் 2020-2021-ம் ஆண்டுக்கு 700 வீடுகள் கட்டி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும், முழு நேர மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் நாகர்கோவிலில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். மீனவர் பெயரில் வேறு எங்கும் கான்கிரீட் அல்லது நிரந்தர வீடுகள் இல்லாத, தங்களது பெயரில் நிலத்திற்கான பட்டா உள்ள மற்றும் அரசின் வேறு எந்த வீட்டு வசதி திட்டத்திலும் பயனடைந்திராத மீனவராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.