செய்திகள்

தேவதானப்பட்டியில் அரசு அதிகாரி மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு

தேவதானப்பட்டியில் அரசு அதிகாரி மனைவியிடம் நகை பறித்தது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மேல்மந்தை தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தேனி அரசு சார்நிலை கருவூலத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று தனது மனைவி சுசீலாவுடன் மோட்டார் சைக்கிளில் தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க சென்றார்.

பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் அவர்கள் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். காட்ரோடு பிரிவில் இவர்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென அவர்கள் மீது மோதுவது போல் இடித்தனர்.

இதில் நிலை தடுமாறி செல்வமும், அவரது மனைவியும் கீழே விழுந்தனர். அந்த சமயத்தில் சுசிலாவின் கழுத்தில் இருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை அவர்கள் பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். #tamilnews