செய்திகள்

தூத்துக்குடி கலவர வழக்கில் மேலும் 7 பேர் கைது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம் தொடர்பாக மேலும் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #Thoothukudi #SterliteProtest #Arrest

தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது.

வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குகளில் மொத்தம் 197 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 173 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். கைதானவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கலில் ரகுமான், முகமது யூசுப், முகமது இசரத், வேல்முருகன், சோட்டையன், சரவணன் ஆகிய 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கலவர வழக்குகள் தொடர்பாக நேற்று அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகேஷ், நாம்தமிழர் கட்சி நிர்வாகி இசக்கிதுரை உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தார்கள். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் கல் வீசியதாக தூத்துக்குடி 3ம் மைல் பகுதியை சேர்ந்த அக்பர் (வயது 47) என்பவரை சிப்காட் போலீசாரும், கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் (29), சிலுவைபட்டியை சேர்ந்த சுரேஷ் (29) ஆகியோரை வடபாகம் போலீசாரும் கைது செய்தனர்.

மேலும் 4 பேரையும் போலீசார் இன்று கைது செய்தார்கள். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. போலீசாரின் கைது நடவடிக்கை காரணமாக தூத்துக்குடியில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் கலக்கத்தில் உள்ள‌னர். #Thoothukudi #SterliteProtest #Arrest