செய்திகள்

எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை சட்டம் தளர்வு - கலவரங்களில் பலி எண்ணிக்கை 9 ஆனது

எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தளர்த்தும் வகையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து நாடு முழுவதும் இன்று நடைபெற்ற போராட்டங்களில் ம.பி, உ.பி, ராஜஸ்தான் மாநிலங்களில் 9 பேர் உயிரிழந்தனர். #BharatBandh

மாலை மலர்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டமாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தளர்த்தும் வகையியில் சுப்ரீம் கோர்ட் சில திருத்தங்கள் செய்து தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக நாடு முழுவதும் தலித் அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தின. குறிப்பாக வட மாநிலங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின.

உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகர் பகுதியில் பேருந்து, கார் உள்ளிட்டவை போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டன. குஜராத், ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் ரெயில்கள் மறிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கலவரம் நடந்து வரும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் குவாலியர், ப்ஹிந்த், மோரேனா மற்றும் சாகர் பகுதிகளில் நடந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் 6  பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

இதே போல, உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் இருவரும், ராஜஸ்தானின் அல்வார் பகுதியில்  நடந்த வன்முறை நிகழ்வில் ஒருவர் பலியாகியுள்ளதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் தாக்கியதில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளதாகவும், போலீஸ் வாகனங்கள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.