புதுடெல்லி:
இந்தியாவில் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு வழிகளை கையாண்டாலும் கட்டுக்கடங்காமல் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
அதன்படி, இந்தியாவின் தலைநகர் டெல்லியின் கோலே மார்க்கெட் பகுதியில் இயங்கிவரும் மாநகராட்சி பள்ளியில் பயின்று வரும் 6 வயது சிறுமி, அந்த பள்ளியின் கடைநிலை ஊழியர் ஒருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நடந்தவற்றை தனது பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவிக்க அவர்கள் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதும், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பள்ளிக்கு வெளியே திரண்ட பெற்றோர்கள் குற்றவாளியை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த புகாரின் அடிப்படையில் அந்த நபரை கைது செய்த போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
6 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனையை 6 மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என இந்த சம்பவம் குறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக தலைமை செயலாளர், டெல்லி அரசு மற்றும் டெல்லி போலீஸ் கமிஷ்னர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #Delhi #NationalHumanRightsCommission