புதுடெல்லி:
ஹவாலா மற்றும் போலி ரசீதுகள் மூலம் அதிகமாக பண மோசடியில் ஈடுபட்டு வரும் மிகப்பெரிய நெட்வொர்க் ஒன்று இயங்கி வருவதாக வருமான வரித்துறையின் கீழ் இயங்கி வரும் மத்திய நேரடி வரிகள் வாரியம் சமீபத்தில் கூறியிருந்தது. அதன்படி ஹவாலா மோசடி, போலி ரசீதுகளை உருவாக்கும் தனிநபர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் ரூ.500 கோடி ஹவாலா மோசடி தொடர்பாக கடந்த 26-ந்தேதி டெல்லி, அரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் 42 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்றும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதில் கணக்கில் வராத ரூ.62 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. சஞ்சய் ஜெயின் உள்ளிட்ட பல்வேறு தனிநபர்களிடம் இருந்து இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனையில் மோசடிதாரர்கள், இடைத்தரகர்கள், பணம் கையாளுபவர்கள், பயனாளர்கள், நிறுவனங்கள் என ஒட்டுமொத்த நெட்வொர்க் தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.