கோப்பு படம் 
செய்திகள்

தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்ட 6 பேர் கைது

தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலையில் கடந்த வாரம் ஆட்டோ ரேசில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பூந்தமல்லி;

வில்லிவாக்கம், திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் பிரபாகர் (வயது30). ஆட்டோ மெக்காணிக்கான இவர் கடந்த வாரம் நண்பர்களுடன் தாம்பரம்- மதுரவாயல் புற வழிச்சாலையில் ஆட்டோ ரேசில் ஈடுப்பட்டனர்.

அப்போது முன்னால் சென்ற லாரி மீது பிரபாகரின் ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் பலியான பிரபாகர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். பின்னர் போலீசாரின் அதிரடி விசாரணையில் ஆட்டோ ரேசின் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து ஆட்டோ ரேசில் ஈடுபட்ட வாகனங்களின் எண்ணை வைத்து சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்து வந்தனர்.

இதில் பூந்தண்டலத்தை சேர்ந்த மதார்ஷா, வெங்கடேசன், ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த உதயா, கிண்டியை சேர்ந்த தனசேகர், அயப்பாக்கம் மகேஸ்வரன், கே.கே.நகர் கார்த்திக் ஆகிய 6 பேர் ஆட்டோ ரேசில் ஈடுபட்டது. தெரிந்தது அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 ஆட்டோ, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆட்டோ ரேசில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு என தனியாக வாட்ஸ்-அப் குழு அமைத்து செயல்பட்டு உள்ளனர். அந்த குழுவில் ரேஸ் குறித்தும், அதில் பங்கெடுக்கும் ஆட்டோக்கள், பந்தயம் கட்டுபவர்கள் என தகவல்களை பறிமாறி கொள்வார்கள்.

பந்தய தூரம் 5 முதல் 15 கி.மீட்டர் வரையும், பரிசு தொகை ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

ரேஸ் ஒப்பந்தத்தில் முக்கியமாக விபத்தில் சிக்கும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதே விதிமுறைகளில் ஒன்றாக வைத்து உள்ளனர்.

ஆட்டோ ரேசில் பணம் சம்பாதிப்பதை விட யார் ‘கெத்து’ என்பதை காட்டவே இந்த ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ரேசில் ஈடுபட்ட மேலும் 10-க்கும் மேற்பட்ட டோரை போலீசார் தேடி வருகிறார்கள். ரேசில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.