செய்திகள்

பீகார் 3 தொகுதி இடைத்தேர்தல்களில் 55.77 சதவீதம் மக்கள் வாக்களித்தனர்

பீகார் மாநிலத்தில் ஒரு பாராளுமன்ற தொகுதி மற்றும் இரு சட்டசபை தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 55.77 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். #biharelection

மாலை மலர்

பாட்னா:

பீகாரில் ஆராரியா மக்களவை தொகுதி மற்றும் ஜகானாபாத், பபுவா ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது..

இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா கூட்டணி மற்றும் கூட்டணி எதிர்க்கட்சிகளான ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பகல் 12 மணி நிலவரப்படி ஆராரியா பாராளுமன்ற தொகுதியில் 31.25 சதவீத வாக்குகள் பதிவாகின.   சட்டமன்ற தொகுதிகளான ஜகனாபாத்தில் 28.6 சதவீதமும், பபுவாவில் 24.5 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இன்று மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஜய் நாயக், ஆராரியா பாராளுமன்ற தொகுதியில் 57 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவித்துள்ளார்.

ஜெஹானாபாத் சட்டமன்ற தொகுதியில் 50.56 சதவீதம் வாக்குகளும், பபுவா சட்டமன்ற தொகுதியில் 54.3 சதவீதமும் வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவின்போது தகராறில் ஈடுபட்டதாக ஆராரியா பாராளுமன்ற தொகுதியில் ஒருவரும், பபுவா சட்டமன்ற தொகுதியில் பத்து பேரும் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மூன்று தொகுதி இடைத்தேர்தல்களில் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 14-ந்தேதி எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும். #tamilnews #biharelection