செய்திகள்

நைஜீரியாவில் 2 மதத்தினர் இடையே மோதல் - 55 பேர் பலி

நைஜீரியாவில் இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் பலியாகினர். #Nigeria #CommunalViolence

அபுஜா:

நைஜீரியா நாட்டின் வட பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தில் கசுவான் மாகாணி நகரில் ஒரு சந்தை உள்ளது. இந்த சந்தையில் இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த சுமை தூக்குகிறவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை தொடர்பாக, இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 55 பேர் பலியாகினர்.

இந்த மோதல் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாகாண போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். மேலும் அந்த நகரத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மத மோதல்கள் குறித்து அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “எந்த மதமும் அல்லது கலாசாரமும் வன்முறையை ஆதரிப்பது இல்லை. சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அமைதியும், நல்லிணக்கமும் நிலவுவது அவசியம்” என்று கூறினார்.

மேலும், “வெவ்வேறு மத நம்பிக்கை உள்ள மக்களிடம் நல்லிணக்கம் இல்லாதவரையில், நமது அன்றாட பணிகளை நாம் செய்து முடிப்பது சாத்தியம் இல்லாமல் போய் விடும். இந்த பிரச்சினையில், மத தலைவர்கள் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும்; வேற்றுமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். #Nigeria #CommunalViolence 

SCROLL FOR NEXT