புதுடெல்லி:
இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2008-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந் தேதியும், ஜூலை 1-ந் தேதியும் தங்கள் நாட்டில் உள்ள மற்றொரு நாட்டைச் சேர்ந்த கைதிகள் பற்றி தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்று கைதிகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டு உள்ளன.
அதன்படி, இந்திய சிறைகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த பொதுமக்கள் 265 பேர், மீனவர்கள் 97 பேர் என மொத்தம் 362 பேர் உள்ளனர். இதுபற்றிய விவரங்களை பாகிஸ்தானிடம் இந்திய அரசு வழங்கி இருக்கிறது.
இதேபோல் பாகிஸ்தான் சிறைகளில் இந்தியாவைச் சேர்ந்த பொதுமக்கள் 54 பேர், மீனவர்கள் 270 பேர் என மொத்தம் 324 பேர் உள்ளனர். அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டிலை இந்தியாவிடம் பாகிஸ்தான் அரசு வழங்கி இருக்கிறது.
இந்திய பொதுமக்களையும், மீனவர்களை அவர்களுடைய படகுகளுடனும் விரைவில் விடுதலை செய்யுமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டு உள்ளது.
இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.