செய்திகள்

இலங்கை பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 51 எம்.பி.க்கள் கையெழுத்து

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் இதுவரை 51 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். #Srilanka #RanilWickremesinghe

கொழும்பு:

இலங்கையில் சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அதில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருக்கிறார்.

இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே இத்தீர்மானத்தை கொண்டு வருகிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் இதுவரை 51 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த தகவலை காமினி லோக்குகே எம்.பி. தெரிவித்தார். இத்தீர்மானத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிடையே பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் எப்போது கொண்டு வருவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் கொழும்பில் இன்று நடக்கிறது.

கூட்டத்திற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமை தாங்குகிறார். அதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே நேற்று ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் நம்பிக்கையில்லா தீர்மானம் இந்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டே ரணில் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பே பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலகி விடுவார் என எதிர்பார்கிறேன்’’ என்றார். #Srilanka #RanilWickremesinghe

SCROLL FOR NEXT