திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் (2019) போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டு, பொது அமைதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 50 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .
353 திருட்டு வழக்குகளில் 295 வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டு, ரூ.5.2 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் அதிக கவனம் செலுத்தி முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 2018-ம் ஆண்டை விட 2019-ம் ஆண்டில் 12 சதவிதம் அளவில் சாலை விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் காவலன் செயலியை 33,818 6 பேர் பதிவு இறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 2 லட்சத்து 70 ஆயிரத்து 206 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.3 கோடியே 20 லட்சத்து 27 ஆயிரத்து 680 வசூலிக்கப்பட்டது.
4229 மதுவிலக்கு வழக்குகளில், 4230 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 136 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 6 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சூதாட்டம், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை, விபச்சாரம், போதைபொருள் விற்பனை, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை போன்ற குற்றங்களை தடுக்க போதிய முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1050 மணல் கடத்தல் வழக்குகளில், 420 மணல் கடத்தல்காரர்களை கைது செய்து 394 லாரிகள், 278 டிராக்டர்கள், 33 ஜே.சி.பிக்கள், 29 மினி வேன்கள், 347 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 256 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு கொலை வழக்குகளில் எதிரிகளும், இரண்டு பாலியல் (போக்சோ சட்டப் பிரிவு) வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர் காவலர் படை 164 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு அதில் மாணவர்களை சேர்த்து இயங்கி வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.