சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3,500 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. பழைய பஸ்கள் படிப்படியாக மாற்றப்பட்டு புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளது.
புதிய பஸ்களில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்படுகின்றன. தற்போது 50 புதிய பஸ்களில் அடுத்து வரும் பஸ் நிறுத்தம் குறித்த தகவல் அறிவிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் இந்த பஸ்களில் பயணிகள் வசதிக்காக பஸ் நிறுத்தம் பற்றிய தகவல் ஒவ்வொரு பஸ் நிறுத்தத்துக்கும் முன்னதாக அறிவிக்கப்படும். இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
பொதுவாக வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இது உதவியாக இருந்து வருகிறது. சென்னையில் முதல் கட்டமாக 3 வழித்தடத்தில் இந்த வசதி நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
தடம் எண்.101 திருவொற்றியூர்-பூந்தமல்லி, தடம் எண்.570 கோயம்பேடு- கேளம்பாக்கம், தடம் எண்.25ஜி அண்ணா சதுக்கம்- பூந்தமல்லி ஆகிய வழித்தடங்களில் தற்போது இந்த வசதி அளிக்கப்படுகிறது.
பொதுமக்களிடம் இதற்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்து வரும் பஸ்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.