செய்திகள்

காஜியாபாத்தில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காஜியாபாத் நகரில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார், மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். #BuildingCollapse

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காஜியாபாத் நகரில் ஆகாஷ் நகரில் ஐந்து மாடி கட்டிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென அந்த ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உள்பட பலர் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்பு பணியினர் அங்கு விரைந்து சென்றனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபடும்படி அறிவுறுத்தினார். #BuildingCollapse