செய்திகள்

கடலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த மேலும் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி

கடலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த மேலும் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #DenguFever

மாலை மலர்

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் ஏராளமானவர்கள் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.

இதனால் மருத்துவமனைகளில் வழக்கத்துக்குமாறாக நோயாளிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் நோயாளிகள் ஏராளமானவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று காலையில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தனர். அவர்களுக்கு ரத்தபரிசோதனை செய்து பார்த்தபோது கடலூர் வன்னியர்பாளையத்தை சேர்ந்த சிவபிரகாசம் உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் அங்கு சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டனர். இதில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். சிவபிரகாசம் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் இன்று காலையிலும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்றனர்.

அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தபோது சிதம்பரத்தை சேர்ந்த கருணாகரன்(34), வீரமுத்து(72), குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கோதண்டராமபுரத்தை சேர்ந்த பிரகாஷ்(39), கடலூர் கேப்பர்மலையை சேர்ந்த தட்சினி(8), குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ரித்தீஷ்குமார்(8) ஆகிய 5 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #DenguFever