கோப்பு படம் 
செய்திகள்

திருப்பதியில் தரிசன டிக்கெட் முறைகேடு, இடைத்தரகர்கள் 5 பேர் கைது

திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட 5 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

திருப்பதியில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களை முறைகேடாக பயன்படுத்தி பலர் ஆர்ஜித சேவா, வி.ஐ.பி. பிரேக் உள்ளிட்ட தரிசன டிக்கெட்டுகளை பெற்று பக்தர்களுக்கு அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர்.

தங்களின் பரிந்துரை கடிதங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

அதில் 10 இடைத்தரகர்கள் உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களை முறைகேடாக பயன்படுத்தி தரிசன டிக்கெட் பெற்று பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த டிக்கெட் பெற்ற பக்தர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் 5 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.