குழந்தைகள் சிகிச்சை பெற்ற காட்சி. 
செய்திகள்

அரூர் அருகே ஓட்டல் இட்லி சாப்பிட்ட 44 பேருக்கு வாந்தி - மயக்கம்

அரூர் அருகே ஓட்டல் இட்லி சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 44 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

மாலை மலர்

அரூர்:

தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்துள்ள கிராமம் பெத்துர். இக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள ஓட்டலில் அப்பகுதி மக்கள் இட்லி வாங்கி வந்து சாப்பிட்டுள்ளனர்.

மேலும், அதனை பள்ளி செல்லும் தங்கள் குழந்தைகளுக்கும் வழங்கி உள்ளனர். இந்த இட்லியை சாப்பிட்ட சமத்துவன், வைதீஷ், அகத்தியா, மதிவதனி, சிவரஞ்சனி, சரித்திரன், அகத்தியன், சிவராமன், சத்திரபதி, அக்‌‌ஷயா, சத்யா, ஜெயபிரதா, தேவதர்ஷினி, ராம்சரண், பெரியார்தாசன், சிவாஜி, அகரமுகுந்தன், அகல்யா, காளியம்மாள், கனிமொழி, மணிகண்டன், அஜய், உள்ளிட்ட 44 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:-

ஓட்டல் இட்லி சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இருந்த போதிலும், எங்கள் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை நீர் தேங்கி உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.