பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திபட்டுபுதுநகரில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் உள்ள ஐந்து அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம்.
தற்போது ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் மின்சார தேவை குறைந்துள்ளது.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் நிலையில் உள்ள 3-ம் அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 210 மெகாவாட் மின்உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.
இதனால் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேவைப்படும்போது மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என்று அனல் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.