சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் 
செய்திகள்

ஊரடங்கை மீறியதாக இன்று மட்டும் 3,577 வழக்குகள் பதிவு - சென்னை காவல் ஆணையர் தகவல்

முழு ஊரடங்கு பகுதிகளில் ஊரடங்கை மீறியதாக இன்று மட்டும் 3,577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு இந்த ஊரடங்கை அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்கின் போது ஞாயிற்றுகிழமைகளிலும்(ஜூன் 21 மற்றும் 28) எந்த வித தளர்வுகளும் இன்றி கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு கூறியிருந்தது. இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ஊரடங்கை மீறியதாக இன்று மட்டும் 3,577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 3 நாட்களில் 10,604 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஊரடங்கு முடிந்த பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் உரிமையாளர்களிடம் வழங்கப்படும் என்று கூறினார்.