சென்னை:
‘ஆன்-லைன்’ மருந்து விற்பனைக்கான அனுமதியை கண்டித்து தமிழகத்தில் 31 ஆயிரம் மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் ரூ.40 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
மத்திய அரசு அகில இந்திய அளவில் ‘ஆன்-லைன்’ மூலம் மருந்துகள் விற்பனைக்கு அனுமதி அளிக்கவும், மருந்துகள் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய ‘இ-போர்ட்டல்’ என்னும் எலக்ட்ரானிக் சேவையை அறிமுகம் செய்யவும் புதிய சட்டம் நிறைவேற்ற முடிவுசெய்துள்ளது.
இதனை கண்டித்து அகில இந்திய அளவில் மருந்து வணிகர்கள் நேற்று ஒரு நாள் மட்டும் மருந்து கடைகள் அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். எனினும், சென்னை, மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மருந்து வணிகர்கள் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற் காக கடை அடைப்பு போராட்டத்தை புறக்கணித்து, அதற்கு பதில் கருப்பு பேட்ஜ் அணிந்து மருந்து விற்பனையில் ஈடுபட போவதாக தெரிவித்து இருந்தனர்.
எனினும் சென்னையிலும் பிரபல மருந்து கடைகள் உள்பட பெரும்பாலான மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திறந்திருந்த கடைகளில் விற்பனையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விற்பனை மேற்கொண்டனர். மருந்து கடைகள் அடைப்பு போராட்டம் குறித்து தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுச்செயலாளர் செல்வன் கூறியதாவது:-
தமிழகத்தில் 35 ஆயிரம் மருந்து கடைகள் உள்ளன. இவற்றில் 3 ஆயிரத்து 500 மருந்து கடைகள் ஆஸ்பத்திரிகளுக்குள் இயங்கி வருகின்றன. சென்னையில் 500 மருந்து கடைகள் திறந்திருந்தன. மதுரையில் 5 கடைகள் திறந்திருந்தன. கரூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில் தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்து 995 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தில் கடையடைப்பு போராட்டத்தினால் சுமார் 40 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் 8 லட்சம் மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 600 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு இருக்க கூடாது என்பதற்காக உதவி எண்கள் அறிவித்து இருந்தோம். அதன் மூலம் உடனடியாக மருந்து தேவைப்பட்டவர்களுக்கு ஆஸ்பத்திரிக்குள் இயங்கி வந்த மருந்து கடைகள் மூலம் மருந்து வழங்க ஏற்பாடு செய்திருந்தோம்.
எங்களது கோரிக்கைக்கு இன்னும் ஒருமாத காலத்துக் குள் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால், அடுத்தகட்டமாக 3 நாள் அகில இந்திய அளவில் மருந்துகடைகள் அடைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.