செய்திகள்

சென்னையில் போக்குவரத்தை சரி செய்யும் 30 பெண் போலீசார்

சென்னை நகரில் தற்போது போக்குவரத்தை சிக்னலில் ஒழுங்குபடுத்தும் பணியில் 30 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி மற்றும் தணிக்கை செய்யும் பணியில் ஆண் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

பெரும்பாலும் ஆண் போலீசார்தான் சிக்னலில் நின்று பணியை மேற்கொள்வார்கள். அதில் பெண் போலீசாரை பார்ப்பது அரிது.

மெரீனா கடற்கரையில் போக்குவரத்து பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து பெண் போலீசார் சிக்னல் பணியில் ஈடுபடுவது மிகவும் குறைவு.

2011-ம் ஆண்டு முதல் போக்குவரத்து பெண் போலீசார் நியமிக்கப்பட்டாலும் ஒழுங்குபடுத்தும் பணி அவ்வளவாக ஒதுக்கப்படுவது இல்லை.

தற்போது சென்னை நகரில் போக்குவரத்தை சிக்னலில் ஒழுங்குபடுத்தும் பணியில் 30 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபடுகிறார்கள். இதை பார்க்கும் வாகன ஓட்டிகளுக்கு புது அனுபவமாக இருக்கிறது.

திருவான்மியூர் ஆர்.டி.ஓ. சிக்னலில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் பெண் போலீஸ் பாத்திமாமேரி கூறுகையில், “இப்பணியை நான் ஏற்றபோது பலர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். சட்டம்-ஒழுங்கு பணியைவிட போக்குவரத்து பணி அதிக நெருக்கடி மற்றும் பொறுப்புணர்வு பெண் போலீசாருக்கும் இருக்கிறது” என்றார்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

“தற்போது காலி பணியிடங்கள் நிறைய இருப்பதால் பெண் போலீசார் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். பொதுவாக போக்குவரத்து பணியில் ஆண் மற்றும் பெண் போலீசார் சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். இதில் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை” என்றார்.

மேலும் போக்குவரத்து பணியை பெண் போலீசார் அதிகம் விரும்புவதாகவும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “போக்குவரத்து பணிக்கு குறிப்பிட்ட நேரம் பணியில் இருந்தால் போதும். இதனால் குடும்பத்துடன் நேரம் செலவிட வசதியாக இருக்கிறது. இதனால் பெண் போலீசார் போக்குவரத்து பணியை விரும்புகிறார்கள்” என்றார். #tamilnews