கைது 
செய்திகள்

குடிபோதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 3 வாலிபர்கள் கைது

கணபதி அருகே குடிபோதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கணபதி:

கோவை கணபதி அருகே உள்ள காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வாசலில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்று விட்டார். அப்போது அந்த வழியே மது போதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 21), தமிழரசன் (28), உன்னி என்ற பிரவீன் (24) ஆகிய 3 பேரும் சேர்ந்து கோபிநாத்தின் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, அருண்குமார், தமிழரசன், உன்னி என்ற பிரவீன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

முன்னதாக இந்த 3 வாலிபர்களும் அதே பகுதியில் வசித்து வரும் மாநகராட்சி அதிகாரி முருகப்பாண்டி வீட்டின் அருகே நின்று குடிபோதையில் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். இதனை முருகப்பாண்டி தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்கள் 3 பேரும், மாநகராட்சி அதிகாரியை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து முருகப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில், 3 பேர் மீதும் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.