லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள பழமையான நகரமான பதேபூர் சிக்ரி என்ற பகுதியில் கடந்த ஞாயிறு அன்று சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலா தம்பதியினர் மீது உள்ளூர் கும்பல் ஒன்று கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதல் குறித்து வெளிநாட்டு தம்பதியினர் புகார் அளிக்காத நிலையிலும், உள்ளூர் போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முகுல் என்ற நபர்தான் இந்த தாக்குதலை தூண்டியது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள முகுலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உத்தரப்பிரதேச மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார்.
இதற்கிடையே, நேற்று ஆக்ராவுக்கு சென்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறுகையில், சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து தம்பதி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 3 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.