ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா அருகே உள்ள உரி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.
அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து கடுமையாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சில மணி நேரங்கள் நீடித்தது.
இந்த என்கவுண்டரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஏற்கனவே கடந்தாண்டு இதே உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.