செய்திகள்

சென்னை சென்ட்ரலில் ரெயில் பயணிகளிடம் வழிப்பறி - தமிழ்நாடு சிறப்புப்படை காவலர்கள் 3 பேர் கைது

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வடமாநில பயணிகளை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக தமிழ்நாடு சிறப்புப்படை காவலர்கள் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு அதிகளவிலான ரெயில்கள் செல்வதால், இங்கு எப்போதும் வடமாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் குவிந்து காணப்படுவர். ரெயில் நிலைய வளாகத்தின் வெளிப்புறத்தில் தமிழக சிறப்புப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பயணியை தாக்கி, அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை தமிழ்நாடு சிறப்புப்படை காவலர்கள் பறித்ததாக, பாதிக்கப்பட்ட பயணி ரெயில்வே ஐ.ஜி பொன்மாணிக்கவேலிடம் புகாரளித்துள்ளார்.

புகாரின் பெயரில் விசாரணை நடத்திய ஐ.ஜி பொன்மாணிக்கவேல்  தமிழ்நாடு சிறப்புப்படை காவலர்கள் ராமலிங்கம், அருள்தாஸ், இருதயராஜ் ஆகிய மூவரை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மூன்று காவலர்களும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக கலக்கிய பொன்மாணிக்கவேல், தற்போது ரெயில்வே பிரிவிலும் தனது  அதிரடியை தொடர்ந்து வருகிறார்.

SCROLL FOR NEXT