செய்திகள்

ராசிபுரம் அருகே காரில் சந்தன மரக்கட்டைகளை கடத்திய 3 பேர் கைது: 18 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காரில் சந்தன மரக்கட்டைகளை கடத்திய 3 பேரை கைது செய்த போலீசார் 18 கிலோ சந்தன கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள முள்ளுக்குறிச்சி வழியாக கொல்லிமலைக்கு சந்தன மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கடந்த சில தினங்களாக தனிப்படை போலீசார் முள்ளுக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று இரவு மது விலக்கு ஏடிஎஸ்பி செந்தில் மேற்பார்வையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் முள்ளுக்குறிச்சியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகமளிக்கும் வகையில் வந்த மாருதி 800 காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது அதில் சுமார் 25 கிலோ எடை கொண்ட சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வேனில் வந்த 3 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கொல்லிமலை, பெரக்கரை நாட்டை சேர்ந்த தனபால்(26), சௌந்தராஜ்(27), சேகர்(36) என்பதும் அவர்கள் கொல்லிமலையில் சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்ய கொல்லிமலை அடிவாரத்தில் முள்ளுக்குறிச்சி அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து மரங்களை வெட்டி கடத்தி வந்ததும் தெரியவந்தது.